எதையும் புரியாமல்
இதயம் பரிவுறும்
கணங்களில் - என் கவலையெல்லாம்
மொழி பெயர் சூட்டி
கொச்சைப்படுத்திவிடுமென்பதுதான்
உன்னத தருணங்களில்
மொழியோர் சுமை
தொலைதுார பயணங்களின்
புலர்பொழுதுளின் துடிப்பை,
ஆள் அரவமற்ற பொழுதுகளில்
காதல் தோல்வியின் வன்மத்தை,
சீதளக் காற்றில் உடலிடையே
அழுந்திய கைகளில் வெம்மையை,
விளம்பிட மொழியில்
தட்டுப்பாடுகள்தான் எத்தனை...
மொழிபெயர்ப்பில் சிதையும்
கவிதைகள் போல
வார்த்தைகளில் உணர்வுகள்
சிதைந்து போகிறது
மொழி வெறும் கோடுகளும்
வளைவுகளின் சேர்க்கை,
இரு மனங்களிற்கு இடைப்பட்ட
மொழியினின்றே ஆரம்பிக்கிறது
இனி,
காதலில், கண்ணீரில்,
புரிதலில், பிரிதலில்
உள்ளங்கள் பேசிக்கொள்ளட்டும்.