சேர்க்கையாய் வெறுமையில்
இருத்தல் இல்லாமலிருத்தல்
இரண்டுமாய் நிலைகளில்
ஒரு மாயப்பொருள்
ஓர் சொல்லிற்கு முன்னும் பின்னும்
மிதந்து கொண்டிருக்கும் மௌனமிது
எல்லையற்ற இந் நாதப்பெருவெளியில்
'நான்' என்பது ஓர் சொல்தான்
நன்மையென தீமையென
நிலையொன்றில்லை
உன்னதமென்றும் புனிதமென்றும்
ஏதுமேயில்லை
பிரபஞ்ச சத்தியமொன்றுதான்
அதை பலதாக்குவது நம் அனுபவமே
திசைகளற்ற இவ்வெளியில்
எத்திசையும் முன்னோக்கியதுதான்